உதவிப் பொருட்களுடன் கொழும்பு வந்தது சீன விமானம்
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீன விமானம் ஒன்று நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் எயர் சீனா நிறுவனத்தின் சரக்கு விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
600 கூடாரங்கள், 20 ஆயிரம் கம்பளிப்போர்வைகள், 5 ஆயிரம் விரிப்புகள், 1000 மழைக்காலணிகள், 20 ஆயிரம் உயிர்காப்பு அங்கிகள், இந்த விமானத்தில் எடுத்து வரப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இந்த உதவிப் பொருட்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் அதிகாரபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா அமைச்சர்கள் ரவி கருணாநாயக்கவும், அனுர பிரியதர்சன யாப்பாவும், சீனாவின் உதவிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர், சிறிலங்காவுக்கு உதவிகள் தேவைப்படும் இந்த நேரத்தில் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்க சீனாவும் சீன மக்களும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நெருக்கடியான தருணங்களில் சீனா எப்போதும் சிறிலங்காவின் பக்கத்திலேயே நிற்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.