தொடர் தீவிரவாத தாக்குதல்களில் 7 பேர் பலி – பீதியில் உறைந்தது லண்டன்
லண்டனில் நேற்றிரவும் இன்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர்தீவிரவாத தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் சன் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு 10.08 மணியளவில் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது, வாகனம் ஒன்றினால் மோதச் செய்த முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து மத்திய லண்டனில் உள்ள Borough Market பகுதியில் கத்தி வெட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் வாள்போன்ற கத்திகளால் பலரின் கழுத்தை அறுத்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்களை அடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினரால் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. குறைந்தது இரண்டு தாக்குதலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1.23 மணிக்கும், 1.28 மணிக்கும் இடையில் Borough Market பகுதியில் மூன்று பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டன. இதுதொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
தொடர் தாக்குதல்களால் லண்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, பிரதமர் தெரெசா மே தலைமையில் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.
லண்டன் நகரம் முழுவதும் பீதியில் உறைந்துள்ளது.