இந்தியா மீதான குற்றச்சாட்டு – நழுவுகிறார் மகிந்த
அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ச செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், “2015 தேர்தலில் உங்களின் தோல்விக்கு, இந்தியாவே குறிப்பாக, ‘றோ’ அமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தீர்கள். எப்படி இருக்கிறது?” என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தெரியும், நான் கடந்த காலத்துக்குள் செல்வதற்கு விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. இப்போது இது ஒரு புதிய பக்கம்” என்று நழுவலாகப் பதிலளித்துள்ளார்.