யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம்
யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 28.8 ஏக்கர் காணிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
காங்கேசன்துறை, மயிலிட்டிப் பகுதிகளில் உள்ள 28.8 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்காக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி, யாழ். மாவட்ட செயலரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்தார்.
1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த இந்தக் காணிகள்,400 குடும்பங்களுக்குச் சொந்தமானவையாகும். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் காணிகளுக்குள் நுழைவதற்கு உரிமையாளர்களுக்கு நேற்றுமுன்தினம் அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும் சில காணி உரிமையாளர்கள் வெறும் நிலத்தை மாத்திரமே கண்டனர். அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டுள்ளன.
இப்போது எந்தக் காணி எந்தக் குடும்பத்தினுடையது என்று அடையாளம் காண்பதில் தாம் பெரிய பிரச்சினையை எதிர்நோக்கியிருப்பதாக யாழ். மாவட்ட செயலர் வேதநாயகன் தெரிவித்தார்.
இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாகவும், இதில், 4500 ஏக்கர் காணிகள் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ளவை என்றும் அவர் குறிப்பிட்டார்.