20 வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா கடற்படை சிறப்புப் பயிற்சி
கடினமான உழைப்பின் மூலம் பெற்றுக் கொண்ட சீரற்ற போர்முறை அனுபவங்களை பெருங்கடல் பிராந்தியத்தின் ஏனைய இராணுவ பங்காளர்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி அடைவதாக சிறிலங்கா கடற்படை தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது சீரற்ற போர்முறை கற்கை நெறியை முடித்துக் கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் பயிற்சி கடந்த ஜனவரி 9ஆம் நாள் தொடக்கம் ஏப்ரல் 6ஆம் நாள் வரை இடம்பெற்றது.
எதிரியின் அச்சுறுத்தலை முறியடித்து.சிறிலங்கா கடற்படை எவ்வாறு பலம் வாய்ந்த அலகாக மாறியது என்பதை றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தனது உரையின் போது விளக்கிக் கூறியிருந்தார்.
சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவான எஸ்பிஎஸ் எனப்படும், சிறப்புப் படகுப் படையணி இந்தக் கற்கைநெறிக்கான வசதிகளை வழங்கியிருந்தது.
இதில், பங்களாதேஷ், சீனா, இந்தியா, மாலைதீவு, நெதர்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆயுதப் பயிற்சி, சண்டை, சிறிய குழு நடவடிக்கைககள், காட்டுப் போர்முறை, இரகசிய கடல்சார் நடவடிக்கைகள், சிறிய படகு நடவடிக்கைகள், களப் பயிற்சி, கடலில் தப்பித்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த மூன்று மாத பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன.