நாளை மறுநாள் ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஏப்ரல் 10ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து சிறிலங்கா பிரதமர் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன் வேறும பல முக்கிய பேச்சுக்களிலும் அவர் ஈடுபடவுள்ளார்.
சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
சிறிலங்கா பிரதமராக கடந்த 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.