கொச்சி துறைமுகத்தில் சிறிலங்கா போர்க்கப்பல்கள்
சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலும், எஸ்எல்என்எஸ் சுரணிமல என்ற ஏவுகணை விரைவுத் தாக்குதல் கப்பலுமே கொச்சி துறைமுகம் வந்துள்ளன.
இந்தக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் ஜெகத் பிரியசாந்த பிரேமரத்ன, கப்டன் றோகித அபேசிங்க மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள கப்டன் ஹேவகே ஆகியோர், இந்தியக் கடற்படையின் தென் பிராந்திய கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் கார்கேயைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
அத்துடன் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் நட்கர்னி மற்றும் இந்தியக் கடற்படையின் கடற்பயிற்சிக்கான கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் ஹம்பிஹோலி ஆகியோரையும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
கொச்சி வந்துள்ள சிறிலங்கா கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து இந்திய கடற்படையினர் பல்வேறு பயிற்சி மற்றும் நிகழ்வுகளில் கூட்டாக பங்கேற்கின்றனர்.
நாளை, இரண்டு நாடுகளின் கடற்படையினரும் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு 1954 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா பயிற்சிகளை அளித்து வருகிறது. அதேவேளை, சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 1987ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியக் கடற்படையினருக்கு சிறிலங்கா பயிற்சி வசதிகளை அளித்துள்ளது.
இரண்டு நாடுகளின் கடற்படைகளும், கூட்டு பயிற்சி ஒத்திகைகள், துறைமுக வருகைகள், கடல் எல்லையில் ஒருங்கிணைந்த ரோந்து போன்றவற்றில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.