200 சிறிலங்கா படையினர் அடுத்த வாரம் மாலி செல்கின்றனர்
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்வதற்காக 200 சிறிலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம், கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தகவல் வெளியிடுகையில், மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்ளவுள்ள சிறிலங்கா படையினர், காங்கேசன்துறையில் இருந்து சூரியவெவ வரையில் களப்பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் நியமங்களுக்கேற்ற ஆய்வுமுறைகளின் பின்னரே மாலி செல்லும் சிறிலங்கா படையினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர் குறிப்பிட்டார்.
மாலியில் சிறிலங்கா இராணுவ பற்றாலியன் ஒன்றை ஐ.நா அமைதிப்படையில் ஈடுபடுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும். மனித உரிமை மீறல்களுடன் தொடர்பற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா படையினரை மாலிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஐ.நா அதிகாரிகள் தாமதித்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கடந்த மார்ச் 22ஆம் நாள் சமர்ப்பித்த அறிக்கையில் இதுபற்றிக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.