அம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படைக் கப்பல்
சிறிலங்காவில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
கடந்த மார்ச் 6ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த யுஎஸ்என்எஸ் போல் ரிவர் கப்பலில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இணைந்து, மார்ச் 7ஆம் நாள் பசுபிக் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்தனர்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பான இந்த ஒத்திகைகள், 12 நாட்கள் நடைபெற்றன. கடந்த 18ஆம் நாள் இந்த கூட்டுப் பயிற்சிகள் நிறைவடைந்தன.
இந்தக் கூட்டுப் பயிற்சியின் போது, பல்வேறு மருத்துவ முகாம்கள், சுகாதாரப் பணிகள், அபிவிருத்திப் பணிகளில் அமெரிக்க, ஜப்பான், அவுஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கூட்டுப் பயிற்சி நிறைவடைந்ததையடுத்து, யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்றுமுன்தினம்- மார்ச் 18ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அடுத்து மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு இந்தக் கப்பல் செல்லவுள்ளது.