அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தை திருத்துவதாக சிறிலங்கா பிரதமர் உறுதி
அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா பிரதமர் நேற்று அழைத்திருந்த கூட்டத்தில் நான்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் மாத்திரம் பங்கேற்றனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், கிழக்கு, தெற்கு, மேற்கு, ஊவா மாகாணங்களின் முதலமைச்சர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல்,சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
வடமாகாண முதல்வர் தமக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறியிருந்தார்.
நேற்று நடந்த கூட்டத்தில், மாகாணங்களின் அதிகாரங்கள் இந்தச் சட்டமூலத்தினால் பறிக்கப்படுவதாக, நான்கு மாகாண முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையடுத்து. நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், சக்திவாய்ந்த அமைச்சரை உருவாக்குவதற்காக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைக்கவே இந்த சட்டமூலம் என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.