லசந்தவைக் கொன்றது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே – குற்றப்புலனாய்வுப் பிரிவு
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே படுகொலை செய்தனர் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா, கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
படுகொலை நடந்த போது, லசந்த விக்கிரமதுங்கவின் வாகனத்தைச் செலுத்திய சாரதியைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி தொடர்பான விசாரணை அறிக்கையை கல்கிசை நீதிவான் மொகமட் சகாப்தீனிடம் சமர்ப்பித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அடையாள அணிவகுப்பின் போது, லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர் தன்னைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியை, சாரதி அடையாளம் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.