ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம்
ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால், மாணவர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரின் உடல் உழைப்பின் மூலம், இந்த தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த நிகழ்வில் சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த தொடருந்து நிலையத்தை திறந்து வைத்திருந்தார்.
உப்பளங்கள், சுற்றுலா விடுதி, பாடசாலை, சந்தை உள்ளிட்டவற்றைக் கொண்ட ஒரு மக்கள் குடியிருப்பாக முன்னர் விளங்கிய ஆனையிறவு பகுதி, தற்போது முற்றிலும் சிறிலங்கா படையினரின் பாவனையில் உள்ள பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.