தொடங்கியது இந்திய- சிறிலங்கா இராணுவ கூட்டுப் பயிற்சி
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.
நான்காவது ஆண்டாக நடக்கும் மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, 6 அதிகாரிகள் உள்ளிட்ட 45 இந்திய இராணுவத்தினர் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்திய விமானப்படையின் சி-130 விமானத்தில், மேஜர் நிதேஸ் பட்னாகர் தலைமையிலான இந்திய இராணுவக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்த போது சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
நேற்று பிற்பகல், அம்பேபுஸ்ஸவில் நடந்த நிகழ்வை அடுத்து, இரு நாட்டுப் படையினரும் பங்கேற்கும் இரண்டு வாரகால மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி ஆரம்பமானது.
நவம்பர் முதல் வாரம் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறவுள்ளது.