அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையைக் கைப்பற்றுகிறது சீன நிறுவனம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குகள் கையளிக்கப்படவுள்ளன.
தனியார்- அரச கூட்டு முயற்சியின் மூலம் 1394 மில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
துறைமுக அபிவிருத்திக்காகச் செலவிடப்படும் நிதியில் 1080 மில்லியன் டொலரை சீன நிறுவனம் பொறுப்பேற்கும். இதற்காக துறைமுகத்தின் 80 வீத பங்குகளின் உரமம் சீன நிறுவனத்துக்கு கைமாற்றப்படும்.
சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஏற்கனவே கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தையும் தரமுயர்த்துவதில் முதலீடு செய்துள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் சிறிலங்கா அரசாங்கம் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதற்குப் பதிலாகவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பாலான பங்குகளின் உரிமத்தை சீன நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரச-தனியார் கூட்டு முயற்சிகளின் மூலம் இந்த துறைமுகத்தை செயற்படுத்துவதன் மூலம், கடன் சுமையைக் குறைக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகத் தெரிய வருகிறது.