யாழ். மாணவர்கள் கொலை – ஐந்து சிறிலங்கா காவல்துறையினருக்கும் விளக்கமறியல்
கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறையினர் ஐவரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதே, எதிரவரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும், வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபர்களான சிறிலங்கா காவல்துறையினரை அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறி்லங்கா அதிபர் செயலம் தெரிவித்துள்ளது.