இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை ஆரம்பம்
இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், நாளை தொடக்கம் எதிர் வரும் 15ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் பீஜிங் சென்றுள்ளனர்.
நேற்று பீஜிங்கில் ஆரம்பமாகிய 7 ஆவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கும் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவினர், நாளை தொடக்கம் சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பர்.
இதில் பங்கேற்பதற்காக சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக உள்ளிட்டோர் சீனா சென்றுள்ளனர்.