கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கோத்தா
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று, நீதிமன்றக் காவல் கூண்டுக்குள் சிறிது நேரம் அடைத்து வைக்கப்பட்டார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தியததாக குற்றம்சாட்டப்பட்டு கோத்தாபய ராஜபக்ச, அவன்ட் கார்ட் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றம்சாட்டப்பட்ட கோத்தாபய உள்ளிட்ட 8 பேருக்கும் நீதிமன்றம் பணித்திருந்தது.
இதற்கமைய, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். அவர்கள் அப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.
கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரும் நீதிவான் பிணை வழங்கும் வரையில் நீதிமன்றக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான், குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 2 இலட்ம்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். அதேவேளை, இவர்கள் அனைவரும் வெளிநாடு செல்வதற்கும் தடைவித்தார்.
எனினும், கோத்தாபய ராஜபக்ச, மேஜர் நிசங்க சேனாதிபதி,மேஜர் வதுகே பெர்னான்டோ ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரினர்.
அதற்கு நீதிவான் இதுகுறித்து எழுத்துமூலம் கோரிக்கை விடுக்குமாறும், அதுகுறித்து வரும் 3ஆம் நாள் முடிவெடுக்கப்படும் என்றும் உததரவிட்டார்.
நேற்றைய வழக்கு விசாரணையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு துணையாக மகிந்த ராஜபக்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.