புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தொடர வேண்டும் – மல்வத்தை மகாநாயக்கர்
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
சட்டவாளர் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவிடமே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவினர் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அப்போது கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள நல்ல பண்புகள் புதிய அரசியலமைப்பிலும் தொடர வேண்டும்.
குறிப்பாக ஒற்றையாட்சித்தன்மை பாதுகாக்கப்படுவதுடன், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மற்றும், அதற்குரிய மதிப்புகள் புதிய அரசியலமைப்பிலும் கொடுக்கப்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் போது, நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்வது சாத்தியமற்றது. எனினும், சமூகத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் ஆலோசனை கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கான இரகசியக் கடிதம் ஒன்றையும் லால் விஜேநாயக்கவிடம் மல்வத்தை பீட மகாநாயக்கர், கொடுத்தனுப்பியுள்ளார்.