கிழக்கு முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ
கிழக்கு மாகாண ஆளுனர் நெறிமுறைகளை அறியாது செயற்படுவதாகவும், தனது பணிகளில் தலையீடு செய்வதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ நிராகரித்துள்ளார்.
“நான் நெறிமுறைகளின் அடிப்படையில் செயற்படும் ஒருவர். அனைவரையும் மதிக்கிறேன். முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து சம்பூருக்கு உலங்குவானூர்தியில் ஏற்றிச் செல்ல மறுத்தது தொடர்பாக முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ,
“உலங்குவானூர்தியை நான் ஒழுங்கு செய்யவில்லை. அமைச்சர் பைசர் முஸ்தபாவின், அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி தான் அதனை ஒழுங்கு செய்திருந்தார்.
அவர், பிரதம செயலாளரையும், அரசாங்க அதிபரையும் அதில் ஏற்றிச் செல்லுமாறு கேட்டிருந்தார். எனவே, எனது மனைவியையும், காவல்துறை அதிகாரியையும்,கூட வீதியால் சம்பூருக்குச் அனுப்பியிருந்தேன்.
அதனால் தான், உலங்குவானூர்தியில் இடமில்லை என்றும், வீதியால் சம்பூருக்குச் செல்லுமாறும் முதலமைச்சரிடம் கூறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.