ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – காலையில் நிலவரம் தெரியவரும்
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 232 தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 16ஆம் நாள் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சுமார் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் படி ஆரம்பிக்கப்படும். முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். அதையடுத்து, காலை 8.30 மணியளவில், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட அரை மணிநேரத்தில் முன்னணி நிலவரங்கள், சுற்றுவாரியாக வெளிவரத் தொடங்கும்.
இந்த தேர்தலில், ஆளும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்திய கருத்துக்கணிப்புகள், மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாத நிலையில், உச்சக்கட்டப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.