நீதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்படுகிறார் விஜேயதாச ராஜபக்ச
அடுத்தமாதம் இடம்பெறவுள்ள சிறிலங்காவின் அமைச்சரவை மாற்றத்தின் போது, விஜேயதாச ராஜபக்ச அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் அமைச்சரவை வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்போது, நிதியமைச்சராக கபீர் காசிம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிதியமைச்சரான, ரவி கருணாநாயக்க, வர்த்தக அமைச்சராக அல்லது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, 10 அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அத்துடன், நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.