ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இப்போதே தயாராகிறதாம் சிறிலங்கா அரசாங்கம்
அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளக் கூடிய வகையில், இப்போதே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா-
”போர்க்குற்ற விசாரணைகளை எத்தகைய பொறிமுறையின் ஊடாக கையாள்வது என்பது தொடர்பிலான கலந்தாலோசனைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும்.
ஜனவரியில் சிறிலங்கா அதிபர், பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாதத்தினுள் எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக தீர்வு எட்டப்படும்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான பொறிமுறைகள் துரிதமாக கையாளப்பட்டு வருகிறது. யாரையும் திருப்திப்படுத்த பக்கசார்பான நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்க முடியாது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தை அரசாங்கம் சரியாக கையாளும்.
அதேபோல எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இப்போதே செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.