மேலும்

சிறிலங்கா – இந்தியா இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இரு நாடுகளினதும், அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலும், இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலும், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக  இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தியா – சிறிலங்கா இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் தெரிவித்துள்ளார்.

”தென்னிந்தியாவுக்கும் மற்றும் வடஇலங்கைக்கும் இடையேயான உறவுகளை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் இருந்து வட-இலங்கைக்கு விமானம் மூலம் பயணிப்போரின் சிரமங்களை போக்க இந்தத் திட்டம் உதவும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கப்பல் சேவைகள் தொடங்கப்பட்டால், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அது மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்று சிறிலங்காவில் உள்ள அகதிகளுக்கான ஐநா ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *