சிறிலங்கா படைகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை
சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பது தொடர்பான நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரித்தானியா, அது தொடர்பாக ஆராய, பிரித்தானிய படை அதிகாரிகள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
மோல்டாவில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்காவின் இராணுவத்தை மறுசீரமைக்க 6.6 மில்லியன் பவுண்டுகளை வழங்க முன்வந்திருந்தார்.
இந்த நிதியுதவியின் கீழ் சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை, புதுடெல்லியில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் கண்காணிப்பார் என்றும் டேவிட் கமரூன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும், கப்டன் ஸ்ரூவர்ட் போர்லன்ட் கடந்த வாரம் கொழும்புக்கு வந்துள்ளார்.
இவருடன், பிரித்தானியாவின் சிறீவென்ஹாம் பாதுகாப்பு அகடமியைச் சேர்ந்த லெப்.கேணல் ஜம்மி ஹாட்லியும் கொழும்பு வந்தார்.
இவர்கள், சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன உள்ளிட்ட சிறிலங்காவின் பாதுகாப்புப் படைத் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சிறிலங்கா படைகளுக்கு பிரித்தானியாவில் பயிற்சிகளை அளித்தல் என்பன தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அடுத்த ஆண்டில், சிறிலங்காவில் பரந்துபட்ட பாதுகாப்பு சூழலில், பாதுகாப்பு முகாமைத்துவம் என்ற கற்கைநெறியை ஆரம்பிப்பது குறித்தும் இவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.