மேலும்

சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி – ஒபாமாவிடம் மைத்திரி கோரிக்கை

MS-Obama-un (1)சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதுபற்றிய தகவலை வெளியிட்டார்.

”தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்கிறோம்.

இதில் ஆயுதப்படைகளை மறுசீரமைப்பது முக்கியமான விடயம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்த போது, அமெரிக்காவினால் பயன்படுத்தப்படும் முன்னேற்றகரமான தொழில்நுட்பங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் குறித்து சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருடனான சந்திப்பு எப்போது இடம்பெற்றது என்றோ, தனது கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் என்ன பதில் அளித்தார் என்றோ சிறிலங்கா அதிபர் தகவல் வெளியிடவில்லை.

கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் ஆரம்பமான ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக சென்றிருந்த போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சிறிலங்கா அதிபர் சந்தித்திருந்தார்.

அதேவேளை, கடந்த வாரம் பாரிசில் நடந்த பூகோள காலநிலை மாநாட்டில் ஒபாமாவும் மைத்திரிபால சிறிசேனவும் பங்கு கொண்டிருந்தனர்.

எனினும்,  இதன் போது இவர்கள் இருவரும் தனியான சந்திப்பு எதையும் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *