சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறார் ஒபாமா- சமந்தா பவர்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.
கொழும்பு நகர மண்டபத்தில் தற்போது நடந்து வரும், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”சிறிலங்காவின் முன்னேற்றங்களை அமெரிக்க அதிபர் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்.
சிறிலங்காவில் எப்படிப் போகிறது என்று அவர் எப்போதும் கேட்பார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஒபாமா கேள்வி எழுப்பியிருந்தார்.
உலகம் சிறிலங்காவை அவதானித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா, தயாராக இருக்கிறது.
நான் அமெரிக்கா திரும்பியதும், சிறிலங்கா பயணம் தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு விபரித்துக் கூறுவேன். சிறிலங்காவுக்கு இன்னும் எப்படி உதவ முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாடுவேன்.
பல்வேறு விவகாரங்களில் சிறிலங்கா அதிபரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து பணியாற்ற முயற்சிப்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
வடக்கில் சிறிலங்கா இராணுவம் பொதுமக்களின் நிலங்களை கையளித்திருந்தாலும், இன்னும் அதிகம் திரும்ப ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
ஆனால் பொதுவாக, நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் மகிழ்ச்சி தருகிறது.
சிறிலங்காவைப் போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனினும் இங்கு செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது.
போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் செயல்முறைகள் குறித்து, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.