பாரிஸ் கலையரங்கு தாக்குதலில் மட்டும் 100 பேர் பலி – பணயக் கைதிகள் அதிரடியாக மீட்பு
பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேவேளை, பாரிசின் Bataclan arts centre கலையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100இற்கும் அதிகமானோரை அதிரடித் தாக்குதல் மூலம் பிரெஞ்சுக் காவல்துறை இன்று அதிகாலை மீட்டுள்ளது.
பாரிசில் நேற்றிரவு 10 மணியளவில் குறைந்தது ஏழு இடங்களில், நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 60இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே, Bataclan arts centre கலையரங்கில், நுழைந்த இரு தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அங்கு 30 வரையிலான சடலங்களைக் கண்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கு 100 பேர் வரை பலியானதாக ஏஎவ்பி தகவல் தெரிவிக்கிறது.
அதையடுத்து, அங்கிருந்து 100இற்கும் அதிகமானோரை தீவிரவாதிகள் பயணக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
இன்று அதிகாலையில் பிரெஞ்சு காவல்துறைக் கொமாண்டோக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தி அங்கிருந்த 100இற்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்டே Bataclan arts centre கலையரங்கிற்குச் சென்றுகொண்டிருப்பதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.