அடுத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு
சிறிலங்கா அரசாங்கம் அடுத்த ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கான நிதி ஒதுக்கீட்டை, 306 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2016ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் படி, அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்புச் செலவினமே அதிகளவு நிதியை விழுங்கவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு, 257.6 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவினமாகவும், 48.9 பில்லியன் ரூபா மூலதனச் செலவினமாகவும் தேவைப்படுவதாக இந்தச் சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்திருந்த பாதுகாப்பு அமைச்சுக்கு, 2015ஆம் ஆண்டு, 285 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
ஆனால், அடுத்த ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் 306 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு இம்முறை நான்கு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டில், 47.6 பில்லியன் ரூபா கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2016இல், 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினம், 1914 பில்லியன் ரூபாவாக இருக்கும், என்றும், மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.