புதுடெல்லியில் மோடியைச் சந்திக்கிறார் சந்திரிகா
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேர்தல்களில் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
புதுடெல்லியில் நடக்கவுள்ள அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் பக்க நிகழ்வாகவே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாநாடு, நாளை தொடக்கம், எதிர்வரும் 5ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் சிறிலங்கா, தாய்லாந்து, மொங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் மேற்கொண்ட பயணத்தின் போது, சந்திரிகா குமாரதுங்கவையும் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அதேவேளை, பௌத்த நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்கு, பௌத்தம் மற்றும் பௌத்தம் போதிக்கும் அமைதி ஆகியவற்றை பயன்படுத்துவதில் இந்தியப் பிரதமரல் மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் முக்கியமாக தீவிரவாதம் குறித்து, முக்கியமாக மத தீவிரவாதம் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.