இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பதவியேற்கிறார் எசல வீரக்கோன்
இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் சிறிலங்காவில் பதவிக்கு வந்த பின்னர், 33 நாடுகளுக்கான தூதுவர்களைத் திருப்பி அழைத்துள்ளதுடன், அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமித்து வருகிறது.
இந்த நிலையில், புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்னவுக்குப் பதிலாக, எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டு, அவரை தூதுவராக புதுடெல்லி ஏற்றுக்கொண்டுள்ளது.
இவர் விரைவில் புதுடெல்லியில் தமது பதவியைப் பொறுப்பேற்பார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எசல வீரக்கோன் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையைச் சேர்ந்த ஒரு மூத்த இராஜதந்திரியாவார்.
இவர் முன்னர், அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவில் துணைத் தூதுவராகவும், நோர்வேக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையை சேர்ந்த, அருணி ரணராஜா பிலிப்பைன்சுக்கான தூதுவராகவும், கலாநிதி சமன் வீரசிங்க ரஸ்யாவுக்கான தூதுவராகவும் பதவியேற்கவுள்ளதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.