மகிந்தவின் களுத்துறைக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக மகிந்த சமரசிங்க அறிவிப்பு
களுத்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் நடக்கவுள்ள, மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கூக்குரல் இட்டு எதிர்ப்புத் தெரிவிக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாலேயே, தாம், அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“நான் மேடையில் ஏறினால் தாம் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக, அஞ்சலில் இரண்டு அமைப்பாளர்களிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன.
கூச்சலிடுபவர்களை என்னால் ஏதுவும் செய்ய முடியாது, நான் சுத்தமான அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளேன்.
சிலர் கூச்சலிட்டால், ஊடகங்கள் பொதுமக்கள் கூச்சலிட்டதாக அறிக்கையிடும். சிலரது திட்டமிட்ட முயற்சி என்பது வெளிவராது.
வெற்றி பெறுவதற்கான எதையும் செய்யும் வேட்பாளர்கள் பலரும் உள்ளனர்.
நாவுலவில் நடந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான நந்திமித்ர எக்கநாயக்கவுக்கு எதிராக கூச்சலிட்டது கண்டிக்கத்தக்கது.
இதுதொடர்பாக கட்சி விசாரணை நடத்த வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை குறைத்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.