அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடி
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானப் பணியை மேற்கொண்டு சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, இந்த கப்பல் கட்டும் தளத்தை( டொக்யார்ட்) நிறுவும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது.
இந்த திட்டம், நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது, அம்பாந்தோட்டை துறைமகத்தில் கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த கப்பல் கட்டும் தளம் தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொண்டு, விரிவான திட்டத்தை தயாரிக்க சீன துறைமுக பொறியியல் நிறுவனம், 12 மாத கால அவகாசம் தரும்படி, சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
அதேவேளை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவி அதனை முகாமைத்துவம் செய்து செயற்படுத்தும் திட்டத்தை முன்வைத்துள்ளதாக, சிறிலங்கா துறைமுக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.