அடிவாங்கிய கோத்தாவின் உயிரைக் காப்பாற்றிய மேர்வின் சில்வா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தாமே ஒருமுறை காப்பாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
மகிந்த ராஜபக்சவுக்கு முன்னர் நெருக்கமாக இருந்த மேர்வின் சில்வா அண்மைக்காலங்களாக ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தானே ஒரு முறை கோத்தாபய ராஜபக்சவின் உயிரைக்காப்பாற்றியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
‘1970ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச முதல் தேர்தலை எதிர்கொண்டிருந்த போதே, நானே அவரது தலைமைப் பேச்சாளராக இருந்தேன்.
அப்போது கேத்தாராம பகுதியில் ஒரு குழுவினர் என்னையும், கோத்தாபய ராஜபக்சவையும் தாக்கினர். அப்போது பதில் தாக்குதல் நடத்தி கோத்தாபய ராஜபக்சவை பாதுகாத்தது நானே.
வேண்டுமானால் இது உண்மையா பொய்யா என்று கோத்தாவிடமே கேட்டுப் பாருங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.