ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக மகிந்த நியமனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று மதியம் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே, மகிந்த ராஜபக்சவை தேர்தல் குழுத் தலைவராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
இதையடுத்து, அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யார் உண்மையான தலைவர் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும், தேர்தல் பரப்புரைக் குழுவின் தரைவராக அறிவிக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார்.
எனினும், தற்போது, அவரது ஒப்புதல் பெறப்படாமலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், தேர்தல் குழு தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.