மட்டக்களப்பில் 46 அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டி
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் குதித்துள்ளன. இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இன்று எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அமீர் அலி தலைமையில் ஐதேக, அலி சாகிர் மௌலானா தலைமையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ.இராசமாணிக்கம் தலைமையில் ஈபிடிபி, வி.கோபாலகிருஸ்ணன் தலைமையில் தமிழர் மகாசபை உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை கையளித்தன.
நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, அவை பரிசீலிக்கப்பட்டு அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
எந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படாத நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 46 கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடவுள்ளன.