யாழ்.மாவட்டத்தில் இன்று மட்டும் 20 வேட்புமனுக்கள் தாக்கல்
வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மட்டும், 11 அரசியல் கட்சிகளும், 09 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 20 வேட்புமனுக்கள் யாழ். மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னாள் நீதிபதி கே.விக்னராஜா தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணியும், அங்கஜன் ராமநாதன் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஜேவிபியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.
அத்துடன், நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையில், முன்னாள் போராளிகளைக் கொண்ட சுயேச்சைக் குழு உள்ளிட்ட 09 சுயேச்சைக் குழுக்களும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.
இதையடுத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் மொத்தம் 17 அரசியல் கட்சிகளும், 12 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் –
- மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
- எமது இலங்கை சுதந்திர முன்னணி
- ஐக்கிய சோசலிசக் கட்சி
- ஈழவர் ஜனநாயக முன்னணி
- தமிழர் விடுதலைக் கூட்டணி
- சோசலிச சமத்துவக் கட்சி
- சிறிலங்கா சுதந்திர கட்சி
- ஐக்கிய மக்கள் கட்சி
- இலங்கை மக்கள் கட்சி
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
- நவசிங்கள உறுமய கட்சி
சுயேச்சைக் குழுக்கள் –
- நடராஜபிள்ளை வித்தியாதரன்
- பெர்னாந்து ஜோசப் அன்ரனி
- தில்லைநாதன் சாந்தராஜ்
- சுந்தரலிங்கம் சிவதர்சன்
- முருகன் குமாரவேல்
- ஆனந்தசங்கரி ஜெயசங்கரி
- கறுப்பையா ஜெயக்குமார்
- ஜெயபால ஜெயசுலக்சன்
- சின்னதுரை சிவமோகன்
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான யாழ்.மாவட்டத்தில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட 9 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிந்திய உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறுகிறது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, 3 அரசியல் கட்சிகளினதும், 6 சுயேச்சைக்குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.