மகிந்த ராஜபக்ச வேட்புமனுவைக் கையளிக்க வரவில்லை
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுவைக் கையளிக்க குருநாகல மாவட்டச் செயலகத்துக்கு வரவில்லை.
குருநாகல மாவட்டச் செயலகத்தில் மகிந்த ராஜபக்சவின் வருகைக்காக செய்தியாளர்கள் காத்திருந்த போதிலும், முதன்மை வேட்பாளரான அவர் வேட்புமனுவைக் கையளிக்க வராதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மகிந்த ராஜபக்சவின் சார்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும், குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டாவது வேட்பாளருமான அனுர பிரியதர்சன யாப்பாவே வேட்புமனுவைக் கையளித்தார்.
அவருடன், பிரபல சட்டவாளர் கோமின் தயாசிறியும் வந்திருந்தார்.
குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மகிந்த ராஜபக்சவுடன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, தயாசிறி ஜெயசேகர, சாந்த பண்டார, ஜெயரத்ன ஹெரத், சாலிந்த திசநாயக்க, இந்திக பண்டாரநாயக்க, அதுலு விஜேசிங்க உள்ளிட்ட 17 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.