திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா – மைத்திரி மீது அதிருப்தி?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கும் விவகாரத்தில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க திடீரென நேற்றிரவு பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய அரசியல் சகாவான சந்திரிகா, அண்மைய அரசியல் நிலவரங்கள் குறித்து அதிருப்தி அடைந்திருந்தார்.
இந்தநிலையிலேயே அவர் பிரித்தானியா சென்றுள்ளது அரதசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்திரிகா குமாரதுங்க லண்டன் சென்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அவரது ஊடக இணைப்பாளர், அது தொடர்பாக சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க நாட்டை விட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர் நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்கவுக்கு இடமளிக்க சந்திரிகா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். அதையும் மீறி பிரசன்ன ரணதுங்க இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.