மட்டக்களப்பில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் யார்?
அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும், நாளை பிற்பகல் 2 மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி சார்பில் 5 பேரும், ஈபிஆர்எல்எவ், புளொட், ரெலோ சார்பில் தலா ஒருவரையும் நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரெலோ சார்பில் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் ஆர்.துரைரெட்ணம், புளொட் சார்பில், தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான அமல் மாஸ்டர் எனப்படும், வியாகுலேந்திரனும் போட்டியிடவுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் சார்பில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருந்த பொன் செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோருடன் இரண்டு புதிய முகங்கள் களமிறக்கப்படவுள்ளனர்.
புதிய வேட்பாளர்களாக களமிறக்கப்படவுள்ள இருவரில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ.சிறீநேசனும் ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.
எனினும், தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ள ஐந்தாவது வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் முடிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.