எந்த மாவட்டத்தில் மகிந்த போட்டி? – இன்னமும் உறுதியற்ற நிலை
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு நாளை வேட்பு மனுவில் கையெழுத்திடுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ள போதிலும், இன்னமும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெலிமடவில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றியிருந்த நிமால் சிறி பால டி சில்வா, மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் நாளை, 10ஆம் நாள் அவர் வேட்புமனுவில் கையெழுத்திடுவார் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மகிந்த அமரவீர நேற்றிரவு பிபிசி சிங்கள சேவைக்கு அளித்திருந்த செவ்வியில், மகிந்த ராஜபக்ச எந்த மாவட்டத்தில் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு தான் முடிந்துள்ளதே தவிர, இன்னமும் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.