மகிந்தவுக்கு நிபந்தனை விதிக்கவில்லையாம் – குருணாகலவில் தான் போட்டியிடுவாராம்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என்று மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனை விதிக்கப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் எந்த பிளவுகளும் இல்லை. தலைவர் என்ற முறையில் மைத்திரிபால சிறிசேன அதனை வழி நடத்துகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு வேட்புமனு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா, சிலருக்கு வேட்புமனு வழங்கப்படாது என்று குறிப்பிட்டார்.
எனினும் அவர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
இதற்கிடையே, ஊவா- பரணகமவில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, குருணாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவில் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என்றும், ஊடகங்கள் தான் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.