போட்டியிடாமல் இருப்பது நல்லது – மகிந்தவுக்கு தொலைபேசியில் கூறினார் மைத்திரி?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று கூறிவிட்டு, தொலைபேசியை வைத்து விட்டதாக, அதிபர் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்டவிடம் கேள்வி எழுப்பிய போது அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு 11 மணி வரை தாம் மகிந்த ராஜபக்சவுடனேயே இருந்ததாகவும், அத்தகைய தொலைபேசி அழைப்புக் குறித்து தாம் அறியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இதுகுறித்து சிறிலங்கா அதிபர் தரப்பின் கருத்தை அறிய முடியவில்லை என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.