தனது கைகளில் இரத்தக்கறைகள் இல்லையாம் – சந்திரிகா கூறுகிறார்
தனது கைகளில் இரத்தக்கறைகள் படியவில்லை என்பதால், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மற்றெல்லோரையும் விட கூடுதலான தகைமைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.
யக்கல பகுதியில் உள்ள சிறிவர்த்தனராம விகாரையில், சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த போதி பூஜையின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் எந்த தவறையும் செய்யவில்லை. நான் கொள்ளையில் ஈடுபடவில்லை. எனது கைகளில் இரத்தக்கறைகள் இல்லை.
எனவே வேறு எவரையும் விட தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூடுதலான தகைமைகள் எனக்கு உள்ளன.
சில அரசியல்வாதிகள் சிறிலங்காவை ஆசியாவின் ஆச்சரியமாக்கப் போவதாக கூறினார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் குற்றங்கள் தான் அதிகரித்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு கொலைகள், வல்லுறவுகள், சிறார் துஸ்பிரயோகங்கள் அதிகரித்திருக்கின்றன.
தெற்காசியாவின் போதைப்பொருள் கேந்திரமாக சிறிலங்கா மாறியிருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.