சுதந்திரக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி இன்று முக்கிய கலந்துரையாடல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களில், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
வரும் ஓக்ஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது தொடர்பாக, இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தாலும், அந்த முடிவை மாற்றும்படி அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
வாக்குறுதி அளித்தபடி, மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பில் கேட்டுக் கொள்ளப்படும் என்றும், அதைச் செய்யத் தவறினால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிளவு ஏற்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.