மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட 7 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்நாட்டவருக்கே இந்தோனேசியாவின் நுசகம்பன்கன் தீவில் உள்ள சிறைச்சாலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களில் மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட இருவர் அவுஸ்ரேலியர்களாவர்.
இவர்களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, அவுஸ்ரேலியாவும், உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளும், விடுத்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து, இந்த தண்டனையை இந்தோனேசியா நிறைவேற்றியது.
மரணதண்டனைக் களத்துக்கு அனுப்பப்பட்ட போது, மயூரனும், அவரது அவுஸ்ரேலிய தோழரும், இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டு சென்றதாகவும், அவர்களை துப்பாக்கி சுடும் அணியினர் நெஞ்சில் குறிபார்த்துச் சுட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர், அவர்களின் சடலங்கள் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
அதேவேளை, இவர்களுடன் மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த பெண் ஒருவருக்கான தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எட்டுப்பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தோனேசியாவில் இருந்து தனது தூதுவரை அவுஸ்ரேலியா விலக்கிக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.