’19’ மீதான விவாதம் தொடங்கியது – அனைவரையும் ஆதரிக்க மைத்திரி கோரிக்கை
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையாற்றியதையடுத்து, விவாதம் ஆரம்பமானது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், நிறைவேற்று அதிகாரத்தை தாம் விரும்பவில்லை என்றும், அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும், 19வது திருத்தத்துக்கு, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, 19வது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள, தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு அறிவித்தார்.
இதையடுத்து,விவாதம் சுமுகமான முறையில் நடந்து வருகிறது.
அதேவேளை, கடந்தவாரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், இன்று காலை தொடங்கம், நாடாளுமன்றப் பகுதியில், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக, புரவசி பலய உள்ளிட்ட பொதுஅமைப்புகள் இணைந்து ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பேரணியில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், மதகுருமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் பேரணி நாடாளுமன்றம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகப் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.