மேலும்

போட்டியின்றி வெற்றி பெறுவார் சம்பந்தன் – கூட்டமைப்பு நம்பிக்கை

sumanthiran-sam-mavaiநாடாளுமன்ற மரபுகளின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு உரித்தானவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“இப்போது, நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது.

எனவே, சட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு உரித்தானவர். இன்று அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று நம்புகிறோம்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரும் இந்தப் பதவிக்கு போட்டியிடுகின்றனர். ஆனால், நாங்கள் அவர்களுடன் மோதவில்லை.

ஏனென்றால், சம்பந்தன் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம். தற்போது சபாநாயகரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது எனக் கூற முடியாது. என்றாலும், அதில் ஒரு வெற்றிடம் வருமாக இருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் இரண்டு பெரிய பிரதானக் கட்சிகள், அப்பதவியை வகிக்கும் வல்லமை மற்றும் தகுதியை இழந்திருந்தால், நாடாளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்ற வகையில் எங்களுக்கே அந்தப் பதவி வரவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவிலிருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதான எதிர்கட்சி என்ற தகமையை இழந்தால், எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

மரபுகளின்படி அப்படியான முடிவே எடுக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் கூறியுள்ளோம். அதில் எந்தத் தவறும் இல்லை.

சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படக் கூடும் என்ற சூழல் நிலவினாலும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அதையும் தொடர்புபடுத்தக் கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைத்தால், உண்மையான எதிர்கட்சியாக செயல்படுவோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *