ரவிராஜ் கொலையாளிகளில் ஒருவர் முன்னாள் கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட உதவியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறிலங்கா கடற்படையினரில், ஒருவர், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் தனிப்பட்ட உதவியாளர் என்று தெரியவந்துள்ளது.
ரவிராஜ் கொலையுடன் சம்பந்தப்பட்ட மூன்று சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார்.
எனினும், கைது செய்யப்பட்ட கடற்படையினரின் விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்தநிலையில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று, கைது செய்யப்பட்டுள்ள கடற்படையினரின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, லெப். கொமாண்டர் பிரசாத் ஹெற்றியாராச்சி, லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மற்றும் பெற்றி ஒவ்விசன் செனிவிரத்ன ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களில், லெப். கொமாண்டர் பிரசாத் முனசிங்க மட்டும், தற்போதும், சிறிலங்கா கடற்படையில் பணியாற்றி வருகின்றார். ஏனைய இருவரும், ஓய்வுபெற்று விட்டனர்.
ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியவராவார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய இவர், பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஜப்பானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர்.
தற்போதைய அரசாங்கம் இவரைத் திருப்பி அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.