சிறிலங்காவின் கணினி அறிவு புள்ளிவிபரங்கள் – இரண்டாம் இடத்தில் வடக்கு மாகாணம்
சிறிலங்காவின் சனத்தொகையில், 5 வயதுக்கும், 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில், நான்கில் ஒருவர் கணினி அறிவு கொண்டவர்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு 100 வீடுகளிலும், 22 வீடுகளில், தலா ஒரு கணினியாவது இருப்பதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து, சிறிலங்காவின் சனத்தொகை, புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், ஏ.ஜே.சதரசிங்க வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
2006/2007 காலப் பகுதியில் இருந்து சிறிலங்காவின் கணினி அறிவு தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.
2006/07இல் ஒட்டுமொத்த கணினி அறிவு, 16.1% மாக இருந்தது. 2009இல், இது 20.3% ஆகவும், 2014இல், 25.1% ஆகவும் அதிகரித்துள்ளது.
நகரப் புறங்களில், கணினி அறிவு அதிகமாக உள்ளது. இங்கு, 34.6%மானோர் கணினிஅறிவு பெற்றுள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் தோட்டப்பகுதிகளில், கணினி அறிவு 23.8% ஆக உள்ளது.
ஆண்கள் மத்தியில் கணினி அறிவு, 27% மாகவும், பெண்கள் மத்தியில் கணினி அறிவு, 23.3%மாகவும் உள்ளது. 15க்கும், 19க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோரிடையே, கணினி அறிவு வீதம் அதிகபட்சமாக (54.4%) உள்ளது. சிறிலங்காவில் வேலைப்படையில், 50 %மானோர் கணினி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
வேலையற்றிருக்கும் இளையோர் மத்தியில் கணினி அறிவு மிக உயர்வாக உள்ளது. 15- 19 வயதுக்கிடையிலுள்ளோர் மத்தியில், கணினி அறிவு 64.8%மாகவும், 20-24 வயதுக்கிடையிலுள்ளோர் மத்தியில் கணினி அறிவு 73.7%மாகவும், 25-29 வயதுக்கிடையிலுள்ளோர் மத்தியில், கணினி அறிவு 75.9%மாகவும் உள்ளது.
5 தொடக்கம் 69 வயதுக்கு இடையிலான ஒவ்வொரு 100 பேரிலும், 10 பேர், இணைய வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த வயதிலுள்ள 100 பேரில் 8 பேர் மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.
இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும் மாகாணமாக, மேல் மாகாணம் உள்ளது. இங்கு 17.5%மானோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். வட மத்திய மாகாணத்தில் குறைந்தளவிலான (4.3%.) இணையப் பயன்பாடு உள்ளது.
மின்னஞ்சல்களை பயன்படுத்துவதில் மேல்மாகாணம் (14.9%) முதலிடத்திலும், அதையடுத்து வடமாகாணம் (8.3%) இரண்டாவது இடத்திலும், வட மத்திய மாகாணம் (2.8%) கடைசி இடத்திலும் உள்ளன.