மகிந்தவின் தோல்வி தெற்காசியாவின் வியத்தகு மாற்றம் – என்கிறது அமெரிக்கா
சிறிலங்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் சக்திவாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை, தெற்காசியாவில் வியத்தகு களத்தை திறந்து விட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரசில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள் குறித்து. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய, அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல், குடும்ப ஆட்சி, அச்சுறுத்தி பிளவுபடுத்தும் கொள்கை, உறுதியற்ற நிலையில் சிக்கியிருந்த சிறிலங்காவில், தேர்தலின் போது நம்பிக்கையளிக்கும் வகையில்,மக்கள் வியத்தகு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.
புதிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிங்கள மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளமை பாராட்டத்தக்கது.
அவர் முந்தைய ஆட்சியில் இருந்த அச்சுறுத்தும் கொள்கைகளில் இருந்து தனது நாட்டை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
முந்தைய ஆட்சியின் போது இருந்ததை விடவும், தற்போதைய அவரது ஆட்சியில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல், சமத்துவமான பொருளாதார வளர்ச்சி, இனப்பதற்றத்தைக் குறைத்தல், ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் உள்ளன.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அவரது கூட்டணியும், உடனடியாகவே, அபிவிருத்தி உதவி, சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட விரிவான ஆட்சி சீர்திருத்த திட்டத்தில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும், வடக்கு, தெற்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அமெரிக்கா தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.